கண்டும் காணாமலும் ......

தமிழனாகப் பிறந்திட்ட ஒரே காரணத்தால் , எதையும் கண்டும் காணாமலும் இருக்க ஆசிர்வதிக்கப் பட்டு, நெஞ்சு நிமிர்த்தி இதுதான் என் கருத்து , என முழக்கமிட வக்கில்லாது , அடையாளத்தையே மறைத்தவனின் வலைப்பக்கம் இது.

பயங்கரவாதம் என்னும் சொல்லுக்கு வரைவிலக்கணம் தேடினால், பின்வருவனவற்றை கண்டுகொள்ளலாம். வன்முறையையும பயமுறுத்தல்களையும் கைக்கொண்டு தமது அரசியல் இலக்கை அடைய முயற்சித்தல். பயங்கரவாதத்தால் நாடு முழுவதும் அச்சம் நிலவும் சூழ்நிலை உருவாக்கப்படும். மேலும் பயங்கரவாதமானது நாட்டை அரசாள்வதற்கும் அல்லது அரசாங்கத்தை எதிர்ப்பதற்கும் பயன்படும். நாம் மேற்கண்ட இந்த வரைவிலக்கணத்தை வைத்துக்கொண்டு எந்தவொரு ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டத்தையும் இலகுவாக பயங்கரவாதம் என முத்திரை குத்திவிட முடியும். ஏகாபத்திய நாடுகள் தமது சொந்த நலன்களுக்கேற்ப இவ்வாறு இயக்கங்களை தாமோ மற்றும் தமது கைப்பாவையான ஐநா சபையைக்கொண்டோ தடை செய்துவிட முடியும். இங்கே அவர்களது அரசியல் இலக்கு என்ன என்பதோ எதற்காக போராடினார்கள் என்பதோ கருத்தில் கொள்ளப்படமாட்டாது.

அதேநேரத்தில் தம்மை ஜனநாயக நாடுகள் என்றும் நாகரிகவாதிகள் என்றெல்லாம் அலைத்துக்கொளும் இந்த நாடுகள் , அந்த விடுதலைபோராட்டத்தை அடக்க , அந்த நாடுகள் செய்யும் பயங்கரவாதத்தை பற்றி தத்தமது பொருளாதார நலன்களுகேற்ப மென்மையான வார்த்தைகளில் கண்டிப்பதுடன் நின்று விடுகின்றன.இதற்கு நேரில் வாழும் உதாரணம் இலங்கையும் அதன் இனவெறி அரசும்.

இலங்கையில் ராஜபக்ச பதவியேற்றவுடன் அறிவித்த முதல் செய்தி , புலிகளுடன் வடக்கு கிழக்கு மக்களின் நலனுக்காக செய்து கொள்ளப்பட்ட சுனாமி கட்டமைப்பு ரத்து என்பதே ஆகும். இதன் மூலம் ஒரு நிர்வாக பரவலாக்கத்திற்கே தான் தயாரில்லை என்னிடம் எந்தவொரு அரசியல் அதிகார பரவலாக்கத்தையும் எதிபாராதீர்கள் எனக்காட்டினான். ஆயுதங்களை தாரளமாக இந்தியா, சீனா , பாகிஸ்தான் மற்றும் ரஷ்யாவிடமிருந்து வாங்கிக்குவித்தான். இந்த நாடுகளும் அவனுக்கு தத்தமது பொருளாதார நலன் சார்ந்து உதவ முன்வந்தன. இலங்கையில் புலிகளின் ஆதரவாளர்கள் மற்றும் தமிழின உணர்வாளர்கள் எனக்கண்டு கொள்ளப்பட்டோர்களை வெள்ளை வானில் கடத்தி கொலை செய்தான். சில நடுநிலையான சிங்களவர்களை புலி ஆதரவாளர்கள் என சிறையில் அடைத்தான். நடுநிலையான ஊடகவியலாளர்களை சிறையில் அடைத்தும் ராணுவ புலனாய்வாளர்களை மற்றும் தமிழ் எட்டபர்களான கருணா , டக்ளஸ் மற்றும் புளொட் எனப்படும் கூலிபடைகளை வைத்து போட்டு தள்ளினான். அவன் எதிர்பார்த்த " அச்சம் தரும் சூழ்நிலை " உருவானது. அதன் பின்னர் தமிழ் தேசியம் பேசிய பாராளுமன்ற உறுபினர்களை குறிவைத்து சிலரை கொன்றும் பலரை நாட்டை விட்டும் வெளியேற செய்தான். இதே நேரத்தில் இந்து ராம் போன்ற தமிழின விரோதிகளை அழைத்து " ஸ்ரீ லங்கா ரத்னா" எனும் பட்டம் கொடுத்து நன்கு "கவனித்து" தமிழ் படுகொலைகளை தமிழ் நாட்டில் மறைக்க முன்னேற்பாடுகளை செய்து கொண்டான்.

அடுத்த கட்டமாக ஏற்கனவே பயங்கர வாத ராணுவமாக இருந்த ஸ்ரீ லங்கா ராணுவத்தை , கொலை வெறி ராணுவமாக கட்டி எழுப்பினான். மனித உரிமை என்பதையே மறந்து விடுங்கள் எனத் தைரியமூட்டினான். தமிழ் பிரதேசங்கள் மேல் பொருளாதார தடைகளை விதித்து உணவையும் மருந்தையும் ஆயுதமாக பயன்படுத்த ஆரம்பித்தான். பசிப்பிணியால் வாடிய மக்கள் மருந்தின்றி போக நம்பிக்கை இழக்க ஆரம்பித்தனர். கப்பல் கப்பலாக ஆயுதங்களை இறக்கி இந்தியா , பாகிஸ்தான் , சீனா மற்றும் ரஷ்யாவுடன் ராணுவ உடன்படிக்கைகளை செய்து கொண்டான். போரும் ஆரம்பித்தது. இந்திய ராடார்கள் துணையுடன் , அமெரிக்க செய்மதிகள் படம் பிடித்த இலக்குகளினை , பாகிஸ்தான் விமானிகளின் மேற்பார்வையில் , சீனக் குண்டுகளை கொத்துகொத்தாக இலங்கை விமானப்படை தமிழ் மக்கள் மீதும் புலிகள் மேலும் வீசிக் கொன்றது. இந்திய கடற்படை உதவியுடன் , புலிகளின் ஆயுதக்கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டன. மேலை நாடுகள் புலிகளின் நிதி மூலத்தை தடை செய்தன.

இவ்வாறான ஒரு சூழ்நிலையில் தமிழகம் கொந்தளிக்க , மனித சங்கிலி மற்றும் தந்தியடிப்பு எனப் போராட்டம் மழுங்கடிக்கப்பட்டது. தம்மை தாமே வேள்வி தீயில் தமிழுணர்வாளர்கள் எரிதுக்கொண்டனர். கடையடைப்புகள் மூலம் தம்மைத்தாமே வருத்தி கொண்டனர். காந்தி இருந்த உண்ணாவிரதம் கூட இருந்து பார்த்தனர் . காந்திதேசமே அலட்சியப் படுத்தியது.

முழு உலகத்துக்கும் எதிராக போராடிய புலிகள் இயக்கம் 3 வருடங்களின் பின்னர் ஒரு நயவஞ்சகமான காட்டிகொடுப்புடன் முற்றுமுழுதாக ராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட்டது. மக்களின் உரிமையை பெற்றுத் தராத இலங்கை போன்ற பயங்கர வாத நாடுகள் இருக்கும் வரை , உரிமைப் போர் என்பது வேறு வேறு களங்களில் வேறு வேறு வடிவங்களில் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

நேற்று ராஜபக்ச விட்ட அறிக்கையில் , இந்தியாவை , சோனியா காந்தியை , மன்மோகன் சிங்கை மற்றும் தமிழக மக்களை பெரிதாக பாராட்டி அறிக்கை விட்டிருந்தான். இந்தியாவின் ஆதரவு தனக்கு மிகவும் நிம்மதி அளித்ததாகவும் ஐநா சபையில் தப்பிய மகிழ்ச்சியில் உணர்ச்சி வசப்பட்டிருந்தான். அவன் சோனியாவையோ , மன்மோகனையோ பாராட்டியதில் எனக்கு எந்த ஒரு ஆச்சரியம் இருக்கவில்லை. ஆனால் அவனது தமிழக மக்கள் மேலான பாராட்டுதான் என்னை உணர்ச்சி வசப்பட வைத்தது. என்ன ஒரு வஞ்சப் புகழ்ச்சி. அவன் வார்த்தைகளில் தொக்கி நிற்பது , ஈழத்தில் என்ன நடந்தாலும் இவர்கள் பெரிதாக அலட்டிக் கொள்ளமாட்டார்கள். எதோ வருத்தப்பட்டு பேசிவிட்டு தமது கடமை முடிந்தது என்று போய்விடுவார்கள் எனபதுதான்.

இதே மாதிரியான ஒரு ஒத்த கருத்தை என்னுடன் பணிபுரியும் சற்றே நடுநிலைமையான ஒரு சிங்களவனும் பகிர்ந்திருந்தான் . நாங்கள் நினைத்தோம் இந்திய அரசும் தமிழக மக்களும் எங்களை ஒரு வழி பண்ணுவார்கள் என்று. ஆனால் தங்களை தாங்கள் வருத்திக் கொண்டு , வேலை நிறுத்தம் பண்ணிக்கொண்டு தீயிட்டு எரித்துக்கொண்டு அமைதியாகி விட்டனர். இந்திய அரசுக்கும் புலிகளுக்கும் பிரச்னை எமக்கு தெரியும். ஆனால் தமிழகத்துக்கும் உங்களுக்கும் என்ன பிரச்னை? தமிழகத்தில் மாட்டும் நாங்கள் ( சிங்களவர்கள் ) இருந்து இலங்கையில் சிங்களவர்கள் சிறுபான்மையாக இருந்து துன்பம் அனுபவித்திருந்தால் , இன்னொரு விடுதலை போராட்டமே நாம் அந்த நாட்டில் நடத்தியிருப்போம் என்றான். மேலும் தமிழக தமிழர்கள் எப்படி இந்தியா பெரிதும் உணர்வுகளை புரிந்து கொள்ளாவிட்டாலும் சமாளித்துக் கொண்டு வாழ்கின்றனர் , ஏன் நீங்கள் அவ்வாறு இருக்க கூடாது என்றெல்லாம் கேட்க ஆரம்பித்துவிட்டான் . அவனுக்கு ராஜீவ் கொலை பற்றியெல்லாம் விளக்கி தமிழகத்தை காப்பாற்ற முனைந்தேன். ஒரே ஒரு வசனம் சொன்னான் , நான் ஒரு சிங்களவன் , என்னக்கு தெரியும் 50 000 மக்கள் கொல்லப்பட்டது . அவர்களை கொல்லாது புலிகளை அழிக்கமுடியாது எனத் தெரிந்த எனக்கே சிறிது அனுதாபமுள்ளது. குற்ற உணர்ச்சி உள்ளது . ஆனால் எவ்வாறு தமிழக மக்கள் இந்திய படை அனுப்பி 10 000 மக்களை கொன்று குவித்த ராஜீவுக்காக , இந்த 50 000 மக்களின் கொலைக்கு காரணம் சொல்லி அமைதியாகி விட்டனர் என்று மேலும் கேட்டான். நான் தமிழ் நாட்டில் நடந்த போராட்டங்களை அவனுக்கு எடுத்து கூறினேன். அவனோ , அதான் தேர்தலில் பார்த்தோமே தமிழக மக்களின் மன நிலையை என்றான் ஏளனமாக. என்னால் பெருமூச்சுதான் விட முடிந்தது.

சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் தமது சுயநலனுக்காக , தமிழக மக்களின் தனிப்பட்ட பிரச்சனைகளுக்கான தேர்தலை ஈழத்துக்கான கருத்துக்கணிப்பாக மாற்ற முற்பட்டு அதில் தோல்வியுற்று முழு உலகத்துக்கும் தமிழக மக்கள் ஈழத் தமிழர்களின் போராட்டத்துக்கு ஆதரவில்லை எனக் காட்டி தற்போது ராஜபக்ச கையால் சான்றிதழ் பெறவும் வைத்துவிட்டனர்.எதிகால வரலாற்றிலும் தமிழ் ஈனத் தலைவர்களாக பெயரும் எடுத்து விட்டனர்.

தற்போதுதான் திடீர் எனக் கண்டுபிடித்தது போல
சில ஜனநாயக இலக்கிய வாதிகளின் பேனா
ஈழப் போர்ராட்ட முறையே தவறு எனும்போதுதான்
புலிகளை இழந்தது , இதயத்தில் சுடுகின்றது

புலிகளின் ஆயுதங்கள் மௌனமாக்கப் பட்ட இந்த சூழ்நிலையில், உலகின் பல்வேறு பாகங்களிலும் ஏன் ஆயுதப் போராட்டம் தோல்வி உற்றது என ஆராய்ச்சிகளும் விவாதங்களும் நடைபெற்று வருகின்றன. பல்வேறு பட்டவர்களும் தத்தமது மனநிலைக்கு ஏற்றவாறு தமது கண்டுபிடிப்புகளை வெளியிட்டு மகிழ்ச்சியும் வேதனையும் அடைந்து , வாசிபவ்ர்களையும் தூண்டுகின்றனர். இந்த நிலையில் புலிகள் அஹிம்சை வழியில் போரிட்டிருந்தால் வெற்றி பெற்று இருப்பார்கள் என்றும் பலர் எண்ணத் தலைப்பட்டு வருகின்றனர்.

நான் இங்கே, காந்தி வழியை கொச்சை படுத்த விரும்பவில்லை. சில வரலாற்று உதாரணங்களுடன் , ஏன், ஈழத்தமிழரால் அதில் நம்பிக்கை வைக்க முடியவில்லை என்று கூற விரும்புகின்றேன்.
1956 ம ஆண்டு இலங்கையில் சிங்களம் மட்டும் என்ற கோஷத்துடன் , பண்டாரநாயக்க ( சந்திரிகாவின் தந்தை ) ஆட்சியைப் பிடித்தார். இதை அவர் சட்டமாக்க முற்பட்டபோது, அன்றைய ஈழத் தமிழ் தலைவர்கள் செல்வநாயகம் தலைமையில் சத்தியாக்கிரகம் மற்றும் ஒத்துழையாமை இயக்கம் நடத்தினர். ஏறத் தாழ 4 , 5 மாதங்கள் நடைபெற்ற இந்த சத்தியாகிரகம் , கொழும்பில் பாராளுமன்றத்துக்கு முன்னர் கூடியிருந்த சத்தியாகிரவாதிகளின் மீது சிங்கள குண்டர்கள் நடத்திய தாக்குதலுடனும் நாட்டில் ஏற்பட்ட முதல் இனக்கலவரத்துடன்( http://en.wikipedia.org/wiki/Sri_Lankan_riots_of_1958) 300 தமிழ் மக்களை பலிவாங்கி முடிவுக்கு வந்தது.

இதன் பின்னர் 1959 இல் பண்டாரநாயக அந்த சட்டத்தை வாபஸ் வாங்க தீர்மானித்த பொது ஒரு புத்த பிக்குவால் சுடப்பட்டார். இலங்கையின் முதலாவது அரசியல் படுகொலை அது.அதன் பின்னர் அமைதி வழிப் போர்ரடங்கள் நடத்தப்படுவதும் நசுக்கபோவதுமாக இருந்தது.
1974 இல் யாழ்பாணத்தில் நடந்த நான்காம் உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் (http://en.wikipedia.org/wiki/1974_Tamil_conference_incident) , இலங்கை காவல் துறையினர் புகுந்து சுட 9 தமிழர்கள் பலியாக ஈழ தமிழ் வாலிபர்கள் ஆயுதம் எந்த நிர்பந்திக்கப் பட்டனர். அந்த நேரதில் பெறப்பட்ட வங்க தேச விடுதலை தமிழர்களை உற்சாகம் அடைய செய்தது. உண்மையில் வங்க தேச விடுதலையில் இந்தியாவின் குறுகிய அரசியல் உள்நோக்கம் தெரியாது உணர்ச்சி வசப்பட, வங்க போரில் இலங்கை பாக்கிஸ்தானுக்கு உதவிய கோபத்தில் இருந்த இந்தியா அதற்கு கொம்பு சீவிவிட்டது.

பின்னர் 1983 இல் நடைபெற்ற இனக்கலவரம் (http://en.wikipedia.org/wiki/1983_riots) ஏறத்தாழ அனைத்து ஈழத் தமிழர்களையும் ஆயுதப் போராட்டமே முடிவு என்று முடிவெடுக்க வைக்க ஆயுதங்களும் பயிற்சியும் கொடுத்து ஊக்குவித்தது இந்தியா. பின்னர் 1987ல் சிங்கள படைகளின் அட்டுழியம் எல்லை மீறிப்போக உணவுப் பொட்டலங்களுடன் பிரசன்னமானது இந்தியா. பின்னர் இந்திய நலன்களுக்கு முக்கியம் கொடுத்து வரையப்பட்ட ஒப்பந்தம் இலங்கை அரசுடன் கைச்சாத்தாகி , தான் கொடுத்த ஆயுதங்களை தானே களைய ஆரம்பித்தது இந்தியா

இதையே எதிர்பார்த்திருந்த சிங்கள படைகள் போராளிகள் மேல் தாக்குதல் நடத்தி , ஒப்பந்தை அமுல்படுத்தாது இழுத்தடிக்க வேடிக்கை பார்த்தது இந்தியா. அப்போது புலிகளின் அரசியல் துறையை சேர்ந்த தியாகி திலீபன் 12 நாட்கள் நீர் கூட அருந்தாது உண்ணாவிரதமிருக்க (http://en.wikipedia.org/wiki/Thileepan) , காந்தி தேசம் வேடிக்கை பார்த்தது. இந்தியா அரசு நினைத்திருந்தால் , அதை தடுத்து பேச்சு வார்த்தையோ அல்லது பிரிடிஷ் அரசு செய்தது போல கைது செய்து வைத்தியசாலையில் சேர்த்திருக்கலாம். இது எதனையும் செய்யாது , நாம் இந்தியா , பிரிடிஷ் அல்ல என நையாண்டி மட்டுமே அன்று ஈழ தமிழருக்கு கிடைத்தது. இவ்வாறான கசப்பான அனுபவங்களே ஈழத் தமிழரை ஆயுதப் போராட்டத்தில் நம்பிக்கை வைக்க தூண்டி இன்று இந்த நிலைமைக்கு கொண்டு வந்தது.

நான் இங்கே புலிகளின் தவறுகளையோ போராட்டத்தினை மக்கள் மயப் படுத்தாதையோ நியாயபடுத்த வரவில்லை. நாம் எந்த ஆயுதத்தினை எடுக்க வேண்டும் என்று நமது எதிரியே தீர்மானிக்கின்றான் என்ற மா ஒ வின் கருத்துக்கு ஈழத் தமிழர் பலியாகி , ஆயுதம் தூக்க நிர்பந்திக்க பட்டு இந்த நிலைக்கு ஆளாகி விட்டனரே என்ற ஆதங்கத்தில் தான் எழுதுகின்றேன்.
ஒவ்வொரு முடிவும் இன்னொரு தொடக்கம் என்பது உலக நியதி . காத்திருப்போம்

புலிகளின் தலைவரின் வீர மரணம் பற்றி இன்னுமே எவராலும் சரியாக உறுதிப்படுத்த முடியவில்லை, அந்த இருண்ட இறுதிக் கணங்கள் புலிகளின் தலைவருக்கும் இன்னும் சிலருக்குமே வெளிச்சம். அதை மக்களுக்கு வெளிக்காட்ட அந்த சக்திகளும் தயாரில்லை .
இந்த நிலையில் பல்வேறு சக்திகள் பல கட்டுக் கதைகளை உருவாக்கி வதந்திகளை பரப்பி தமிழ் உணர்வாளர்களை மனம் தளர வைக்க முயற்சித்து வருகின்றன.

முதலில் தலைவர் உயிருடனுள்ளதாக அறிவித்த புலிகளின் அனைத்துலக செயலகம், தற்போது வீரசாவடைந்தாக துக்கம் அனுஷ்டிகின்றது. தமிழக தமிழின உணர்வாளர்களான நெடுமாறனும் வைகோவும் , "இது தவறான செய்தி , தலைவர் வருவார்" என்கின்றனர். பத்மநாதனை கண்டிக்கின்றனர். தமிழின விரோதிகள் எதிர்பார்த்தும் இதைத்தான். தலைவரின் மரணம் , ஈழ மற்றும் தமிழக மக்களிடையே ஒரு எழுச்சியை ஏற்படுத்தி விடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கின்றனர். அத்துடன் இனிவரும் புலிகளின் தலைமை , இந்த அனுதாபத்தை பயன் படுத்தி இது வரை விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடாதவர்களையும் நடுநிலைமை வகித்தவர்களையும், ஒன்று திரட்டி விடுமோ என்ற அச்சமும் இந்த தமிழின விரோதிகள் மற்றும் ஏகாதிபத்திய வாதிகளிடன் உள்ளது. எனவே தலைவர் மரணத்தை ஒரு வதந்தியாக வைத்திருப்பது , இவர்களுக்கு சாதகமே. அத்துடன் புலித் தலைமை இன்னும் உயிருடன் இருப்பதாக கூறி , இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்கள் கூட , ஈழ தமிழரை மேலும் அடக்குமுறைக்கு உட்படுத்தவும் மேலை நாடுகளை பாராமுகமாக வைத்திருக்கவும் முடியும்.

இந்த நிலையில் இதுவரை புலித்தலைமையை விமர்சித்து , புலிகளால் தான் எல்லாமே என்று கண்ணை மூடிக்கொண்டு அறிக்கை விட்டு தம்மை தாமே மாற்றுக் கருத்தாளர்கள் என்று அழைத்துக் கொள்ளுபவர்கள் , இன்று , புலிகளின் அனைத்துலகப் பொறுப்பாளரை , தூரோகி என்றும் காட்டிக் கொடுத்தவர் என்றும் கூறத் தலைப் பட்டிருக்கின்றனர் . இதுவரை காலம் அவர்கள் சுமத்திய குற்ற சாட்டுக்களான, தனது பிள்ளைகளை யுத்தத்தில் ஈடுபடுத்த வில்லை , யுத்த வலயத்தை விட்டு ஓடிவிட்டார் போன்றவை பொய்யாக , என்ன செய்வதறியாது திகைத்துபோய் நிக்கின்றனர், மற்றும் அவர்களை பொறுத்தவரை புலித் தலைமை மரணமடைந்து விட்டது இனியும் எதிர்த்து அறிக்கை விட்டால் மக்கள் ரசிக்க மாட்டார்கள் எனக் கண்டு கொண்டனர் .

இந்த (ஏ) மாற்று கருத்தாளர்கள் எனியும் ஒரு வலிமையான தமிழ் தலைமை வர அனுமதிக்க போவதில்லை. தமக்கும் அந்த இடத்தை நிரப்ப ஆளுமை கிடையாது என்றும் தெரியும். அத்துடன் வெறுமனே கண்டன அறிக்கை விட்டு பழகிப் போன இவர்கள் இன்று யாரை எதிர்ப்பது என்று தெரியாது புலம்பி தமது அடுத்த இலக்காக தெரிவு செய்திருப்பது புலிகளின் அனைத்துலகப் பொறுப்பாளர் பத்மநாதனை.

நான் இங்கே புலித்தலைவர் இறந்து விட்டதாகவோ , பத்மனாதனுக்காக வாதிடவோ வரவில்லை. எனது ஆதங்கமெல்லாம் , தமிழ் மக்கள் ஒன்று படவேண்டிய இந்த தருணத்தில் அவர்களை குழப்பத்தி ஆழ்த்தி பேரினவாதிகளுக்கு துணை போகின்றனரே இந்த (ஏ) மாற்று கருத்தாளர்கள் என்பது மட்டுமே. புலிகள் மட்டும் ஒதுங்கிக் கொள்ளட்டும் , தமிழ் மக்களுக்கு நாம் விடுதலை பெற்று தருவோம் என்றெல்லாம் முழக்கமிட்டனர் இந்த மாமணிகள். இப்போதுதான் அந்த சூழ்நிலை வந்துவிட்டதே , ஈழத்துக்கு போய் உதவுவார்கள் என்று பார்த்தால் , எனி யாரை எதிர்த்து அறிக்கை விடலாம் என்று சிந்திகின்றன்ர் இந்த புத்தி ஜீவிகள்.

மக்களே தயவு செய்து , இந்த (ஏ) மாற்று காரர்களின் பேச்சை நம்பி பேரினவாதத்துக்கு சோரம் போய்விடாதீர்கள். இந்த போராட்டத்தில் நாம் உண்மையான மாற்றுக் கருத்தாளர்களை உருவாக்காது , எட்டப்பர்களை மட்டுமே உண்டாக்கி உள்ளோம் .இதற்கு என்ன காரணம் என்று விவாதம் செய்து ஒருவர் மேல் ஒருவர் பழியை போடாது, எமது இனத்தின் விடுதலைக்காக உழைப்போம் இந்த புதிய நெடிய களத்தில்.