கண்டும் காணாமலும் ......

தமிழனாகப் பிறந்திட்ட ஒரே காரணத்தால் , எதையும் கண்டும் காணாமலும் இருக்க ஆசிர்வதிக்கப் பட்டு, நெஞ்சு நிமிர்த்தி இதுதான் என் கருத்து , என முழக்கமிட வக்கில்லாது , அடையாளத்தையே மறைத்தவனின் வலைப்பக்கம் இது.

துயரமும் அவநம்பிக்கையும் சூழ்ந்து நிற்கும் இந்த காலகட்டத்தில் தமிழ் உணர்வாளர்களும் தமிழின விரோதிகளும் தத்தமது நிலைக்கேற்ப கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். எப்போதும் தமிழினத்திற்கு எதிராகவே நச்சை உமிழும் விரோதிகள் ஒரேயணியில் இருந்து கொண்டு,எவ்வாறு புலிகளும் தலைவரும் கொல்லப்பட்டனர் என்று வர்ணித்து புளாங்கிதம் அடைய, தமிழின உணர்வாளர்களோ என்ன செய்வதறியாது திகைத்து போயுள்ளனர். இதில் ஒருபிரிவினர் , தலைவர் வீரச்சாவடைந்து விட்டார் என்றும் இனி ஆகவேண்டியதை பார்த்து போராட்டத்தை ஜனநாயகவழியில் முன்னெடுத்து செல்லவேண்டும் என்று செயற்படுகின்றனர். மற்றைய பிரிவினரோ,இல்லை தலைவரும் புலிகளும் காடுகளில் பதுங்கி உள்ளனர் என்று கூறிவருகின்றனர்.

இந்த இரண்டாவது பிரிவினருள், பழ.நெடுமாறன், வைகோ மற்றும் திருமாளவன் அடங்குவர். இவர்கள் அடிக்கடி , ஈழப்போராட்டம் விரைவில் புலிகளின் தலைவர் தலைமையில் தொடங்கும் என்றும் காடுகளில் பதுங்கியிருக்கும் இருபதனாயிரம் புலிகளும் அப்போது வெளிப்படுவர் என்றும் பேசிவருகின்றனர். அவர்கள் கூறுவது உண்மையாக இருந்தால், கோடிகணக்கான தமிழர்களுக்கு அதைவிட மகிழ்ச்சியான செய்தி இருக்கமுடியாது.ஆயினும் உண்மையை உறுதிபடுத்திக் கொள்ளமுடியாதிருக்கும் இந்த காலப்பகுதியில்,இவ்வாறான கூற்றுகளும் அறிக்கைகளும் போராட்டத்தினை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதை தடுப்பதாகவே அமையும்.

புலிகளின் தலைவர் வீரச்சாவடைந்தார் என்று செய்தியானது , ஒரு மிகப்பெரும் எழுச்சியையும் ஆர்பாட்டங்களையும்,தமிழகம் மற்றும் புலம் பெயர் நாடுகளில் ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு,"உயிருடன் உள்ளார்" என்று செய்தி வந்தபின்னர், அனைத்துமே நீர்க்குமிழி போல அடங்கிப் போய்விட்டன. இன்றுவரை மரணித்த அந்த வீரர்களுக்கு எந்தவொரு அஞ்சலிக் கூட்டங்களைக் கூட நடத்த முடியவில்லை.

"உயிருடன் உள்ளார்" என்பதற்கு பலமான வாதங்கள் இருக்கலாம். ஆனால் "உயிருடன் உள்ளார்" என்று நம்பி, அடுத்தகட்டத்திற்கு நகராது காத்திருந்து பற்பல ஆண்டுகளின் பின்னர் "வர முடியாது" எனும் நிலைஏற்படும் போது, எல்லாமே கைமீறிப் போயிருக்கும். அதைவிட , "இல்லை" என்று எழுச்சி கொண்டு போராட்டத்தினை வீறு கொண்டு நடத்தினோமானால், பின்னர் புலிகளின் தலைவர் மீண்டும் பிரசன்னமாக வரும் சூழ்நிலை ஏற்படின் அதைவிட ஒரு மகிழ்ச்சி உலகத்தமிழர்களுக்கு இருக்கப் போவதில்லை.

இப்படிப்பட்ட ஒரு காலகட்டத்தில், இல்லையென்று அடித்துக் கூறி மகிழ்ச்சிக் கூத்தாடும் தமிழின விரோதிகளின் செயற்பாடுகள், ஈழப் போராட்டத்திற்கு உரம் சேர்க்க, "உள்ளார்" என்று கூறி வரும் தமிழன உணர்வாளர்களின் செயற்பாடுகள், போராட்டத்தினை முடக்கவே பயன்படுகின்றது என்பதே யதார்த்தம். எனவே யாதர்த்தம் புரிந்து செயற்படுவோம்.

இன்று உலகெங்கும் குறிப்பாக இலங்கை போன்ற இனவெறி நாடுகளில் "ஒரு கொடி - ஒரே தேசம்( One Flag - One Nation)" என்னும் முழக்கங்கள் வானளாவ ஒழித்து , சிறுபான்மை இனங்களின் கழுத்தை நெரிக்கின்றன. சாதாரணமாகப் பார்க்கும் பொழுது நாடு(Country) மற்றும் தேசம்(Nation) என்னும் இருவேறு சொற்களும் ஒரே அர்த்தத்தினை தந்தாலும், இவ்விரு சொற்களும் வேறுபட்டவை.நாடு என்பது , ஒரு அரசியல் நிர்வாகத்திற்கு உட்பட்டு அரசியல் காட்சிகளாலோ அல்லது தனி மனிதர்களாலோ ஆளப்படுவது. தேசம் என்பதோ, ஒரு பொதுவான பண்பாட்டையோ , மொழியினையோ அல்லது மதத்தையோ பின்பற்றி வரும் மக்கள் கூட்டத்தைக் குறிப்பது. அதாவது ஒவ்வொரு தனித்தன்மையான தேசிய இனங்களையும் ஒரு தேசமாக கருதலாம்.

அந்தவகையில் பார்க்கும் போது இலங்கை என்னும் "நாட்டுக்குள்" சிங்கள,தமிழ் மற்றும் முஸ்லிம் எனும் மூன்று "தேசங்கள்" வாழ்கின்றன. இவற்றை எல்லாம் பொருட்படுத்தாது , இது ஒரே ஒரு தேசம் , இங்கு சிறுபான்மையினர் என்று யாரும் கிடையாது என்று கூக்குரலிட்டு, சிறுபான்மை இனங்களை விழுங்கத் துடிக்கும் சிங்கள பேரினவாதம் சாதிக்கப் போவது வெறுமனே அவநம்பிக்கைகளையும் இனங்களுக்கிடையே மேலும் விரிசல்களையும் தான்.

இதயத்து குமுறல்கள் தணிக்கை செய்யப்படாவிடில்
இம்மியும் உடல் கிடைக்காத கொலைகார தேசம்.

அங்கே முட்கம்பிகளுக்குள் கிழிபடும் எமதுயிர் உறவுகள்.
அவர்தம் உதடுகள் வெடிக்கும் எதற்கும் "புலி"தான் காரணம்.

உலகம் பதியும் வரலாற்றில் இவர்கள் "சூழ்நிலைக் கைதிகள்"

ஆனால் தமிழர்கொடி பட்டொளி வீசிய முழுமதிக் காலத்தில்
அந்தக் கொடிநிழலில் வாழ்க்கையோட்டி ஈழம் விற்று

தமிழ் தேசியம் பேசிய புலம்பெயர் உதடுகள் சில - இன்று
யதார்த்தம் பேசி தேய்பிறைக் காலத்திலும் குரைகின்றன.

நாம் ஒளியிழந்த இந்த அமாவாசைக் காலத்தில்
முதலையோ மெய்யோ,கண்ணீருக்கு இல்லை வித்தியாசம்.
அனைத்தையும் மறைக்கின்றது இருட்டு

நாளை இருள் நீங்கும் ஒரு வைகறைப் பொழுதில்
வரலாறு பெயரிடும் இவர்கள் "சந்தர்ப்பவாதிகள்"

இந்து பத்திரிகை பற்றியோ அல்லது என். ராம் பற்றியோ எவ்வித அறிமுகமும் கொடுக்கதேவையில்லை.நூற்றாண்டு காலாமாக,பத்திரிகைத் தொழிலை நடத்தி வரும் குடும்ப பாரம்பரியத்தை உடையவர் இந்த ராம். இலங்கையில் பதவியிலிருந்த அனைத்து ஜனாதிபதிகளுடன் தனிப்பட்ட நட்பு பாராட்டிவருபவர். இந்த நட்பு எப்படிப்பட்டது எனில் , ஆயிரம் ஆயிரம் தமிழர்கள் சிங்கள அரசால் படுகொலை செய்யப்பட்டாலும் இந்த நட்பு மென்மேலும் இருகுமே தவிர விரிசல் காணாது. ராமுக்கு சிங்கள ரத்னா விருது வழங்கியதும் இந்த நட்புதான், எழுதமுடியாத இன்னபல வழங்கியதும் இந்த நட்புதான்.

சிங்கள அரசு அகதி முகாம் என்ற போர்வையில் நடத்திவரும் வதைமுகாம்களுக்கு சிங்கள அரசினர் மற்றும் அரச ஊடகங்கள் தவிர யாரும் செல்ல அனுமதி கிடையாது. சிங்கள எதிர்க் கட்சியினர் கூட அங்கு செல்ல முடியாத நிலையே காணபடுகின்றது. ஐ நா செயலர் வந்த ஒருதடவை மட்டும் வெளிநாட்டு ஊடகங்கள் அனுமதிக்கப்பட்டன. ஆனால் அங்குள்ள மக்களை சுதந்திரமாக ஊடகவியலாளர்களுடன் பேச அனுமதிக்கவில்லை.

இந்த நிலையிலேயே இந்து ராமின் விஜயமும் இடம்பெற்றிருந்தது. அப்படியே முழு பூசணிகாயை மறைத்து , முகாமின் தரத்தை ஆஹா ஓஹோ எனப் புகழ்ந்திருக்கும் ராம் , இறுதியாக , தமிழக அரசு நடத்தி வரும் முகாமை விட பல மடங்கு சிறந்தது சிங்கள அரசு நடத்தி வரும் வதை முகாம் என்று கூறி இந்திய தமிழக அரசுகளின் லட்சணத்தையும் போட்டுடைக்கிறார். ஒருவேளை இந்திய குடிஉரிமை துறந்து ரகசியமாக சிங்கள குடிமகனாக மாறிவிட்டாரோ தெரியவில்லை. இங்கே இந்து ராமின் கருத்துகள் , ஐ நா செயலர், இலங்கை தலைமை நீதிபதி , அனைத்துலக பத்திரிகைகள் ஆகியவற்றின் கருத்துகளுடன் நூறு சதவீதம் மாறுபடுகின்றது. சிங்கள அரசின் எலும்புத் துண்டுக்காக ஐ நா செயலரையே பொய்யராக்கி விட்டார் இந்த ராம்.

இதுவரை காலமும் புலிகளின் பெயரைச் சொல்லி , சிங்கள அரசை நியாயப் படுத்திவந்த ராம் போன்ற பத்திரிக்கையாளர்கள் இப்போது என்ன சப்பைக் கட்டு கட்டப் போகிறார்கள் ? உண்மையில் இவர்களது வெறுப்பெல்லாம் பாவப் பட்ட ஈழத் தமிழினம் மேல்தான். அடக்கப் பட்ட தமிழினம் உரிமை கூறி போராடுவதை இவர்களால் சகித்துக் கொள்ளவே முடிவதில்லை.இந்த நிலையில் , அடுத்துவரும் நாட்களில் யார் யார் எல்லாம் சிங்கள அரசின் விருந்தினராக சென்று முகாம்களுக்கு தரச் சான்றிதழ் கொடுக்க போகின்றார்கள் என்று சிந்தித்தால் பின்வரும் புத்திஜீவிகள் சோ , சுப்பிரமணியன் சுவாமி , மணிசங்கர் அய்யர் மற்றும் இளங்கோவன் போனால் ஆச்சரியப் படுவதற்கில்லை.

இந்து ராம் கூறியதற்கு பலபடி மேலே போய், தமிழக மக்களின் குடியிருப்புகளை விட சிங்கள அகதி மற்றும் வதை முகாம் சிறப்பானது எனற கருத்துகளை இவர்கள் உதிர்த்தாலும் ஆச்சரியபடுவதற்கில்லை.நாம்தான் எல்லாவற்றையும் சகித்துக் கொள்ளப் பழகிவிட்டோமே.


தொடர்புடைய செய்திகள்

யாருக்கு தூதுவர்களாக செயற்படுகின்றன தமிழ்நாட்டு ஊடகங்கள்: 'தினமணி' சாடல்


செட்டிக்குளம் முகாமின் அவலம்: குடிதண்ணீரைப் பெறுவதற்கே 3 நாட்களாக வரிசையில் காத்திருக்கும் மக்கள்


மாணிக் பார்மில் வாரத்திற்கு 1400 தமிழர்கள் அநியாயமாக சாவு

ஈழத்தில் போர் உக்கிரமாக நடைபெற்று எமது உறவுகள் எல்லாம் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்டுக் கொண்டிருந்த சூழ்நிலையில்அதுவரை இலங்கை என்னும் நாடு உள்ளதே தமக்கு தெரியாதுபோல மௌனம் சாதித்து வந்த வடஇந்திய ஊடகங்கள் கூட ,இந்தப் பிரச்னை பற்றி செய்திவழங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டன.இதற்கு முக்கிய காரணம் மேலைநாட்டு ஊடகங்கள் ஈழத்தமிழர் பிரச்சனைக்கு முக்கியம் கொடுக்க தொடங்கியமையாகும்.இதில் வேதனை தரும் விடயம் என்னவெனில் இந்த வட இந்திய ஊடகங்கள், ஸ்ரீ லங்கா அரசின் ஊதுகுழல்கள் போல , சிங்கள அரசு தந்த தகவல்களை அப்படியே கண்ணை மூடிக் கொண்டு வெளியிட்டன. ஈழத் தமிழ்ப் படுகொலையை அப்படியே மூடி மறைத்தன. ஓரிருவர் விபத்தில் சிக்கி இறந்தாலே , நாள் முழுக்க செய்தி கூறும் இந்த ஊடகங்கள் ஆயிரக் கணக்கான ஈழத் தமிழர் கொல்லப் பட்டதை அப்படியே இருட்டடிப்பு செய்தன.அத்துடன் ஈழத் தமிழர் மீதும் புலிகள் மீதும் சிறிதளவேனும் அனுதாபம் வரக்கூடாது என்பதற்காக , "ராஜிவ் காந்தியைக் கொலை செய்த பயங்கரவாதிகள்" என்று கூவிக் கூவி
முத்திரை குத்தின.

பொதுவாக வட இந்திய தொலைக்காட்சிகள் செய்திகளை ஒளிபரப்பும் போது சம்பந்தப்பட்டவர்களை அழைத்து கலந்துரையாடல்களை நடத்துவது வழக்கம். ஈழப்பிரச்சனைக்காக அவ்வாறு அழைக்கப்பட்டவர்கள் யார் யார் என்று பார்த்தால் தமிழின உணர்வுள்ள ஒவ்வொருவரின் இதயத்திலிருந்தும் வேதனை பீறிடும். இந்து ராம் , சோ மற்றும் சுபிரமணியன் சுவாமி என்னும் தமிழின விரோதிகளே அவர்கள்.வட இந்திய ஊடகங்களுக்கு இவர்களை தவிர தமிழகத்தில் ஆங்கிலம் பேசத் தெரிந்தவர்கள் எவரும் இல்லையா என்ற ஆதங்கமே எழுகின்றது.இவர்களினது தமிழ் தேசிய விரோதப் போக்கும் , ஈழம், காவிரி மற்றும் சேது சமுத்திர நிலைப்பாடும் உலகறிந்தவை.வட இந்திய ஊடகங்கள் தாம் எதிர்பார்க்கும் பதிலுக்காக இவர்களை அழைத்து தமிழகபுத்திஜீவிகளாக வடஇந்தியர்களுக்கு அறிமுகப் படுத்த இவர்களும் ,புலிகள் அழிக்கப் பட்டதில் அனைத்து தமிழக மக்களுக்கும் மகிழ்ச்சி ,எந்த ஒரு ஈழத் தமிழனும் இதுவரை இலங்கையில் கொல்லப் படவில்லை என்று முத்துகளை உதிர்ப்பார்கள்.வட இந்திய ஊடகங்களும் இதுவே தமிழக மக்களின் எண்ணவோட்டம் என இனிதே செய்தி அரங்கத்தை நிறைவு செய்யும்.

இந்தியாவின் சுதந்திரத்துக்காக உண்மையிலேயே பாடுபட்டவர்கள் எல்லாம் கொல்லப்படும் அந்தமான் சிறைகளிலும் வாழ்க்கையைத் தொலைக்க , வெள்ளையர்களுடன் ஒட்டி உறவாடி ,வெள்ளையினப் பெண்களுடன் "நட்பு" பாராட்டிய நேரு மற்றும் அவரது சகபாடிகளே , வெள்ளையின அரசால் இந்தியாவை ஆள அனுமதிக்கப் பட்டனர். அது போல , வட இந்திய ஊடகங்களும் தமது விருப்பு வெறுப்புகேற்ப, தமிழகத்தின் குரலை தாமே உருவாக்குகின்றன. அப்பாவித் தமிழர் நாமோ வழமை போல கொர்ர்ர்ர்ர் ....

01. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
ஈழத் தீவினில் துன்பத்தில் உழல தமிழ் மொழியினை தாய் மொழியாக கொண்டமையால் வந்தது.
எமக்கு எம்மையே வெறுக்கும்படி ஆனபின் பெயர் மட்டும் பிடிக்குமா ?

2.கடைசியாக அழுதது எப்பொழுது?
கடைசியாக எப்போது சிரித்தீர்கள் என்று கேட்டிருந்தால் சில வேளை பதில் அளித்திருக்க முடியும். அழுது கொண்டே இருப்பவரைப் பார்த்து இந்தக் கேள்வியைக் கேட்டால் என்ன பதில் சொல்வது

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
தலையெழுத்தே துன்பம் என்றான பின்பு கை எழுத்தாவது கால் எழுத்தாவது.

4.பிடித்த மதிய உணவு என்ன?
பட்டினியாகக் கிடக்கும் எமக்கு எது கிடைத்தாலும் அது பிடித்த உணவுதான்.அது எலிக் கறியோ ,கீரைக் கஞ்சியோ

5.நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா ?
நிச்சயமாக மாட்டேன். தொப்புள் கொடி உறவுகள் என்று நினைத்த சொந்தங்களே முதுகில் குத்தும் ஒருவனுக்கு நீதி நியாயம் இருந்த காலமானால் நட்பு வைத்து உதவலாம். ஆனால் இந்த சுயநல உலகத்தில் எப்படி நட்பு வைத்துக்கொள்ள முடியும் . என்ன கருணாநிதி அவர்களே சரிதானே?

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
அகதி முகாமில் குடிக்கவே தண்ணீர் இல்லாது அல்லல் படுபவனிடம் நல்ல கேள்வி ஐயா கேட்கிறீர்கள்

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
கையில் பயங்கர ஆயுதமிருக்கா என்றே பார்ப்போம்


8.உங்க கிட்ட உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
அதுதான் ஏற்கனவே சொல்லிவிட்டோமே பிடித்த விஷயம் என்று ஒன்றும் கிடையாது. அப்படி நினைக்கவும் எமக்கு உரிமை கிடையாது.

பிடிக்காத விடயம் என்றால், இந்த பாழாப் போன இன உணர்வு , தன்மானம் மற்றும் சூடு சுரணை. இவை இருந்ததால் தானே எமது கதி இப்படியாகிப் போனது.


9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விஷயம் எது?
சரி பாதி என்றால் , தமிழக சகோதரர்கள் தானே ?
பிடித்தது , பக்கத்தில் இடியே விழுந்ததாலும் அமைதியாக இருப்பது. அது ஈழமாகட்டும் காவிரியாகட்டும் .

பிடிக்காதது என்றால் , எதுவுமே கிடையாது. ஹ்ம்ம்

10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?
எமக்கெல்லாம் இதுவரை காவல் தெய்வமாக இருந்தவர்கள் பக்கத்தில் இல்லையே இந்த அநியாயங்களை தட்டிக் கேட்க என்று வருந்துகின்றோம்.

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?
இதை எழுதும்போது மட்டுமல்ல எம்மிடம் எப்போது இருப்பதும் இந்த ஒரே கந்தலாடைதான். அதற்கு நிறமே கிடையாது.

12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
யாரை நம்பி நாம் பிறந்தோம் மற்றும் ஆண்டவனைப் பார்க்கணும் அவனுக்கு ஊத்தணும்

13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
இப்பவே எங்கள் ரத்த மை எடுத்துதானே , உலக ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகின்றன.

14.பிடித்த மணம்?
ஆண்டாண்டு காலமாக இந்த வெடி குண்டு மணத்திலும் பிண நாற்றம் மத்தியில் வாழ்ந்து , அதுவே பழகிவிட்டது

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு?
மீண்டும் பிடித்த விடயமா ? எங்களுக்கு அந்த உரிமையே கிடையாது கனவான்களே.

17. பிடித்த விளையாட்டு?
வாழ்க்கையே எமக்கு மரண விளையாட்டு.

18.கண்ணாடி அணிபவரா?
எதைப் படிக்க போகின்றோம் இந்த முட்கம்பி முகாமில் , எதுவுமே இல்லையே எதுக்கு கண்ணாடி ?

19.எப்படிப் பட்ட திரைப்படம் பிடிக்கும்?
மூச் மீண்டும் "பிடிக்கும்"

20.கடைசியாகப் பார்த்த படம்?
தூள் காமெடி ஸ்டைலில் கருணாநிதியின் உண்ணாவிரதம். சூப்பரா இருந்தது.

21.பிடித்த பருவ காலம் எது?
ஹ்ம்ம் . மழை வந்தால் அகதி முகாம் வெள்ளக் காடாகும் வெய்யில் வந்தால் வெப்பு நோய்கள் தாக்கும். எதைத்தான் சொல்வது ?

22.இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்:
மூச் , புத்தகம் படித்து புரட்சி செய்ய போகின்றாயா என்று அருமை சிங்கள ராணுவத்தினர் , முகாமில் வைத்தே போட்டுத் தள்ளிவிடுவார்.

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
அப்படின்னா ? நாங்கள் மேசையைப் பார்த்தே பல காலம்

24.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
யுத்த விமானம் குண்டு வீசிப் போனபின்பு ஒரு சத்தம் கேட்கும். அந்த சத்தம் கேட்டே பதுங்கு குழியை விட்டு வெளியே வருவோம். அதுவே பிடித்த சத்தம்.

பிடிக்காதது என்றால் , இப்பொழுது காந்தியமும் அகிம்சையும் போதிக்கும் சந்தர்பவாதிகளின் குரலொலி.

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
வீட்டைத் தொலைத்தே நாட்கள் பல ஆகிவிட்டன. இதில் தொலைவு எங்கே பார்க்க

26.உங்களுக்கு ஏதாவது தனித்திறமை இருக்கிறதா?
சத்தமாக கேட்காதீர்கள் , தமிழன் உனக்கேன் தனித்திறமை என்று போட்டுத் தள்ளிவிடப் போகிறார்கள்.

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
யார் என்ன சொன்னாலும் ஏற்றுக் கொள்வோம் , ஏனெறால் நாங்கள் ஈழத்தமிழர். எமகென்று ஒரு விருப்போ கருத்தோ கிடையாது.

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
எங்களை சூழத் தான் எல்லா சாத்தான் நாடுகளும் இருகின்றனவே

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
சிங்கள அரசு மற்றும் இந்திய ராணுவம் தயவால் இலங்கை முழுக்க கால் நடையாகவே பெட்டி படுக்கைகளுடன் சுத்தி பார்த்தாச்சு , ஏன் ராமேஸ்வரம் ,மேலை நாடுகள் முழுக்க புலம் பெயர்ந்தவர்களாக சுற்றுலா போயாச்சு.

30.எப்படி இருக்கணும்னு ஆசை?
ஏற்கனவே சொல்லியாச்சே , எமகென்று ஆசையோ கருத்தோ கிடையாது.

31.மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?
சொந்த மனைவியையே கண்முன்னால் இழுத்து செல்வதை பார்க்கும் போது, மனைவி இல்லாமல் போகட்டும் என்பதே பிரார்த்தனை.

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?
நரகம்