கண்டும் காணாமலும் ......

தமிழனாகப் பிறந்திட்ட ஒரே காரணத்தால் , எதையும் கண்டும் காணாமலும் இருக்க ஆசிர்வதிக்கப் பட்டு, நெஞ்சு நிமிர்த்தி இதுதான் என் கருத்து , என முழக்கமிட வக்கில்லாது , அடையாளத்தையே மறைத்தவனின் வலைப்பக்கம் இது.

இன்று உலகெங்கும் குறிப்பாக இலங்கை போன்ற இனவெறி நாடுகளில் "ஒரு கொடி - ஒரே தேசம்( One Flag - One Nation)" என்னும் முழக்கங்கள் வானளாவ ஒழித்து , சிறுபான்மை இனங்களின் கழுத்தை நெரிக்கின்றன. சாதாரணமாகப் பார்க்கும் பொழுது நாடு(Country) மற்றும் தேசம்(Nation) என்னும் இருவேறு சொற்களும் ஒரே அர்த்தத்தினை தந்தாலும், இவ்விரு சொற்களும் வேறுபட்டவை.நாடு என்பது , ஒரு அரசியல் நிர்வாகத்திற்கு உட்பட்டு அரசியல் காட்சிகளாலோ அல்லது தனி மனிதர்களாலோ ஆளப்படுவது. தேசம் என்பதோ, ஒரு பொதுவான பண்பாட்டையோ , மொழியினையோ அல்லது மதத்தையோ பின்பற்றி வரும் மக்கள் கூட்டத்தைக் குறிப்பது. அதாவது ஒவ்வொரு தனித்தன்மையான தேசிய இனங்களையும் ஒரு தேசமாக கருதலாம்.

அந்தவகையில் பார்க்கும் போது இலங்கை என்னும் "நாட்டுக்குள்" சிங்கள,தமிழ் மற்றும் முஸ்லிம் எனும் மூன்று "தேசங்கள்" வாழ்கின்றன. இவற்றை எல்லாம் பொருட்படுத்தாது , இது ஒரே ஒரு தேசம் , இங்கு சிறுபான்மையினர் என்று யாரும் கிடையாது என்று கூக்குரலிட்டு, சிறுபான்மை இனங்களை விழுங்கத் துடிக்கும் சிங்கள பேரினவாதம் சாதிக்கப் போவது வெறுமனே அவநம்பிக்கைகளையும் இனங்களுக்கிடையே மேலும் விரிசல்களையும் தான்.

2 comments:

nice explanation thanks

நன்றி அனானி